Saturday, November 27, 2010

தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்:ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., ஆவேசம்

சென்னை:""நான்கரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, மாணவர்கள் கடத்தல் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்க வழிவகுத்ததுதான் தி.மு.க., அரசின் சாதனையாக உள்ளது. இதற்கு பொறுப்பேற்று தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்,'' என,வடசென்னை மாவட்டசெயலாளர்,டி.ஜெயக்குமார் பேசினார்.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான தி.மு.க., அரசைக் கண்டித்து, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, 26 நவம்பர் அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அமைப்புச்செயலாளர் .சி. பொன்னையன் அவர்கள் பேசும்போது,""தி.மு.க.,வை நம்பி காங்கிரஸ் மோசம் போயுள்ளது. அவர்களால் பிரதமருக்கு ஏற்பட்ட அவமானம், இந்திய வரலாற்றில இதுவரை எந்த பிரதமருக்கும் நேர்ந்ததில்லை.தமிழகத்தில் தி.மு.க., செல்வாக்கு இழந்து விட்டது. தமிழகம் முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்'' என்றார்.முன்னிலை வகித்து மாவட்டச் செயலாளர் .டி. ஜெயக்குமார்அவர்கள் பேசும்போது,""நான்கரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, மாணவர்கள் கடத்தல்கள் சர்வ சாதாரணமாக நடக்க, வழிவகுத்தது தான் தி.மு.க., அரசின் சாதனையாக உள்ளது.இப்போது மொபைல் போனில், ஒரு நிமிடத்திற்கு 60 பைசா கொடுத்து பேசுகிறீர்கள்; ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்கவில்லை என்றால் ஐந்து பைசாவில் பேசியிருக்க முடியும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் தொலை தொடர்புத்துறை ஸ்தம்பித்துள்ளது.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இனியும் தொடரக்கூடாது; விரைவில் அ.தி.மு.க., ஆட்சி மலரும்'' என்றார்.ஆர்ப்பாட்டத்தில், பூங்காநகர் எம்.எல்.ஏ..வும் துறைமுகம் பகுதி செயலாளருமான,கு. சீனிவாசன், மாவட்ட பொருளாளர் வெற்றிவேல்,கொளத்தூர் பகுதி செயலர் வெற்றி நகர் .மு.சுந்தர்.  உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு: ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்ததால், ராஜாஜி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.வேறு வழியின்றி போலீசார், அவ்வழியேயான போக்குவரத்தை நிறுத்தி, மாற்று வழியில் செல்ல வழிவகுத்தனர். இதனால் மக்கள் அவதிப்பட்டனர். போக்குவரத்து சீரடைய இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது.

No comments:

Post a Comment